Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உன்னப்பனின் விண்ணப்பம் !!! 28

அதிரைநிருபர் | December 09, 2010 | , , , ,

//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு....

வா
போவோம்
வழி நெடுக பேசிக்கொண்டே...
நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,
மொத்த கனவுகளின்
ஒற்றைப் பலன்!

யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.

பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!

ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடது கை விரல் பிடித்து
நீயும்
வலது கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற தினம்
நினைவிருக்கா உனக்கு...?

நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!

நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!

நீ உண்டமிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!

வளர்ந்தொருநாள்
வாலிபம் என
இளைஞனாவாய்...

இளமை...
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திறிவாய்...

இருப்பதெல்லாம்
இஷ்ட்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்...

இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்...

இல்லாதோருக்கு ஈவாய்
இன்னலுற்றோருக்கு உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்...

இத்தனை சிறப்போடும்
இன்னபிற எழிலோடும்
இருக்கும்
இன்னிலையில்...

முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ
முடங்கிப்போகையில்...

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழு பசிக்குமாக
முக்காலத்திற்குமாய்
மூன்று கவலம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தருவாயா மகனே?

- sabeer

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: உருக வைத்து விட்டீர்கள் !

விழிகளின் ஓரத்தில் அல்ல விழியே குளமக நிரம்பி வழிந்தோட வைத்த ஒவ்வொரு வரிகளுக்கும் என்னால் அணைகள் கட்டி வைத்திட முடியவில்லை !

வரிகளை வாசிக்கும் போது வந்து விழுந்த விழி நிரில் கரை ஒதுங்கி நிற்கின்றேன் விட்டுப் பிரிந்த என் வாப்பாவின் நினைவுகளோடு !

//பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!//

என் சுவாசம் முட்டுகிறது !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மூச்சு விட முடியவில்லை அழுகையுடன் எழுதுகிறேன்.படிப்பதற்கும் சக்தி இழந்தவனாக.பிறகு என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்து சொல்கிறேன் கவிதை எப்படியென்று.

Unknown said...

சபீர் காக்காவின் கவிதையின் நடை நம்மை அழகாக நடை பயிற்று எங்கோ கூட்டி செல்கிறது .....சுவாசம் தெளிகிறது .....
கவிதையின் முதல் படம் அழகப்பொருந்துகிறது ......

Yasir said...

ஏன் காக்கா காலையிலேயே கண்ணீரை வர வழைத்துவிட்டீர்கள்...ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது..கண்கள் குளமாகிவிட்ட்து..அதுவும் //முதுமை எய்தி//க்கு பிறகு வந்த வரிகளை படிக்கும் போது...உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் வடிந்து விட்டது....வாப்பாவிடம் இப்ப சிறிது நேரம் பேசினால்தான் மன நிம்மதி வரும்....ஒரு கவிக்கு இதனை விட வெற்றி கிடைக்காது காக்கா

ZAKIR HUSSAIN said...

கவிதை எழுதுவது ஏதோ ஜல்லியடிக்கிற விசயம் மாதிரி சாதாரண விசயம் இல்லை என்பது கமென்ட்ஸ் எழுதுபவர்களின் எழுத்தில் தெரிகிறது.ஒரு கவிதையின் வீரியம் அடுத்த மானிட்டரை பார்க்கும் மற்றவர்களையும் கண் கலங்க செய்யும் என்பதும் தெரிகிறது. பொதுவாக தந்தையரின் ஏக்கம் எல்லாம் வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் நம் ஊரின் சூழ்நிலையும் ஏதோ அவுட் ஆப் ஃபோகஸ் படம் மாதிரி தெளிவில்லாமல் ஆக்கிவிடும்.

sabeer.abushahruk said...

ோதிகத்தில் தந்தை தான் பெற்ற பிள்ளைகளிடமெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்றொரு போதனை பரவலாக பல மேன்மட்ட பெற்றோர்களிடமும் அறிவுஜீவிகளிடமும் சமூக முன்னேற்ற ஆர்வலர்களிடமும் காண முடிகிறது

இதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொல்லிமட்டும் நிறுத்தாமல் என் தரப்பு வாதத்தையும் இங்கு வைத்துவிடுகிறேன். 

கடைசி காலத்தில் என் உழைப்பால் சேமித்தவற்றைக்கொண்டு நான் உண்டேனென்றால் நான் காசு பணத்தை வென்றேன், காலநேரத்தை வென்றேன் இன்னபிற கன்றாவியையும் வென்றேன் என்றுமட்டுமே கொள்ள முடியும்.

இதுவா ஒரு ஆரறிவு படைத்த மனிதனின் வெற்றி?
இதை ஒரு கணக்கீடுகளுக்குட்பட்ட கமெர்ஷியல் வெற்றியென வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். 

இந்த நிலையை அடைவதா வாழ்க்கையின் தாத்பரியம்? 
இதற்கா இத்தனை ஓட்டம்? 
இதுவா மனிதத்தின் எல்லை? 
நிச்சயமாக இல்லை

sabeer.abushahruk said...

மனிதன் மனங்களை வெல்ல வேண்டும். பாசத்தை விதைத்து பரிவை அறுவடை செய்ய வெண்டும். அன்பை புகட்டி அன்பையே புசிக்கப் பெற வேண்டும். 

என் சேமிப்பிலிருந்து எனக்கு ராஜ உபசரிப்புக் கிடைக்க வேண்டாம். என் மகனோ மகளோ அவர்தம் சொந்த உழைப்பில் ஒரு பருக்கை உணவு தந்தாலும் என் அகோர பசிகூட சட்டென அடங்கும். காரணம் அது  சாதாரண பருக்கை அல்ல; அன்பு, பாசம், பரிவு, இறக்கம், கருணை என அத்தனை நற்குணங்களும் புகுத்தி பெருக்க வைத்த பருக்கை.

மகனிடம் ஏன் எதிர்பார்க்கக்கூடாது? தந்தைக்குத் தருவது தணையனின் தன்மையல்லவா? 
நாயிடம் நன்றியும் 
நரியிடம் தந்திரமும் 
மழையிடம் கருணையும் 
மதியிடம் ஒளியும்
எதிர்பார்க்கவில்லையா? 
மகனிடம் மட்டும் ஏன் எதிர்பார்க்கக்கூடாது? 

சரி, அவன் தரவில்லையெனில்? இருவருமே தோற்கும் வினோத விளைவில் வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விடும். மற்றொரு முறை வாழ்க்கை இடறி விழும். மனிதம் குப்புற விழுந்து குறுக்குடைந்து போகும். 

எனவே,
பிள்ளைகளிடம் எதிர்பார்க்கனும். அந்த எதிர்பார்ப்புக்கு தகுதியான வாழ்க்கையையே நாம் வாழனும்.

Yasir said...

///பிள்ளைகளிடம் எதிர்பார்க்கனும். அந்த எதிர்பார்ப்புக்கு தகுதியான வாழ்க்கையையே நாம் வாழனும்/// நச் பஞ்ச்....வழிமொழிகிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என் சேமிப்பிலிருந்து எனக்கு ராஜ உபசரிப்புக் கிடைக்க வேண்டாம். என் மகனோ மகளோ அவர்தம் சொந்த உழைப்பில் ஒரு பருக்கை உணவு தந்தாலும் என் அகோர பசிகூட சட்டென அடங்கும். காரணம் அது சாதாரண பருக்கை அல்ல; அன்பு, பாசம், பரிவு, இறக்கம், கருணை என அத்தனை நற்குணங்களும் புகுத்தி பெருக்க வைத்த பருக்கை.///

கவிக் காக்கா: தங்களின் கருத்தாய்வுக்குள் நானும் மூக்கை நுழைக்கிறேன் !

பெர்ற மக்களிடம் தந்தையை எதிர்பார்க்க வைப்பதை விட, தனையனே தந்தைக்கு ஆற்றிடும் கடமைகளை உணர்ந்து செயல்படுவதில்தான் வெற்றியே !

தந்தையின் முதுமையை புன்முறுவலுடன் தடவிக் கொடுக்க பிள்ளைகள் பக்குவப் படவேண்டும், முதுமையில் அவர்களின் செயல், சொல் சில சமயங்களில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு (ஆண் மக்களாகட்டும் பெண் மக்களாகட்டும்) பிடிக்காமல் இருக்கலாம் அதனைக் கொண்டு அவர்களை தனிமைப் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் தந்தையை எதிர்பார்க்க வைக்கும் முன்னர் பிள்ளைகள் முந்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் ரஸூலும் காட்டித் தந்த வாழ்வியலே இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியை தரக்கூடியது ! அங்கேயிருக்கிறது படிப்பினைகள் பாசம் போராட்டங்கள்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்.
அப்போது
உங்கள் கூட இருந்ததில் உங்களை உச்சி முதல் உள்ளங்கால் கால் வரை நான் அறிவேன்.
இப்போது
உங்கள் கூட நான் இல்லை ஆனால் அதிரை நிருபர் மூலம் உள்ளத்தில் உள்ள கவிதைகளை நான் காண்கிறேன்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா's : இந்தக் கவிதையை அதிரப்பட்டினத்து பெண்டிரிடம் வாசித்து விட்டு அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டினேன்... வாசித்த அந்த நால்வரும் ஒரே பதிலைத்தான் பகிர்ந்தார்கள் கண்ணீர்தான் முட்டுகிறது என்றனர், அதில் அவர்களின் வாதம் நாங்கள் (பெண்கள்) வாப்பாவிடம் திருமணத்திற்கு முன்னர் பெற்றிருப்போம் ஆனால் திருமணங்கள் நடந்தேறியதும் அவர்களிடமிருந்து நாங்கள் பெருவது அரிது அவர்களாக தருவதைத் தவிர... ஆனால், நமதூர் வழக்கில் எங்களின் கடமையை அவர்களுக்கு செய்வதில் முந்திக் கொள்கிறோம்... ஆண் மக்களின் பங்களிப்பு வாப்பாவின் கடைசி காலங்களில் ஏனோ குறைவே நமதூர் சூழலின் நிதர்சனமே !

Unknown said...

அதிரைகவி சபீருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்துல்லாஹ்பின் அம்ரு(ரலி) நூல்: திர்மிதி


நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14 )


பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)


அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?' முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.)

தந்தையின் தியாகங்களை நினைவுபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் சபீர் அவர்களுக்கு,

அனைத்து வரிகளும் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்ததோடு அல்லாமல் படிப்பவர்கள் ஒவ்வொருவரின் கண்களையும் கலங்க வைத்துவிட்டது. தகப்பனானவர்களுக்கும், தகப்பானாக போகிறவர்களுக்கும், தகப்பனுக்கு தன் கடமைகளை செய்துவருபவர்களுக்கும், தகப்பனுக்கு தன் கடமைகளை செய்ய போகிறவர்களுக்கும் பாடம் நடத்த தேவையான SYLABUS இந்த கவிதையில் உள்ளது.

அருமை காக்கா, நல்ல சிந்தனையை எல்லோர் மனதில் பதிய வைத்ததுக்கு மிக்க நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ரசிக்க வைத்த வரிகள்

பிஞ்சுப் பாதங்கள்

//நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!//

நம்மில் அநேக பேர் அனுபவித்தது.

//நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்

உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!//

பல வீடுகளிலும் நீங்கள் சொல்வது போன்ற பணிமனைகள் உள்ளது என்பது உண்மை.

வெளிநாடுகளில் வாங்கியனுப்பும் கார் பொம்மைகளை பிள்ளைகள் உடைத்துவிடுவான் என்று சொல்லியே சில வீடுகளில் "கார் பொம்மை SHOWROOM" இருக்கு காக்கா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்கு முன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி (ஸல்) கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சிறுபிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் 'பாப்பா பாட்டு' என்ற பகுதி இருப்பது போல் சகோ. சபீரின் கவிதைகளை தொகுத்து 'வாப்பா பாட்டு' என சிறுவர்களின் பாடப்புத்தகத்தில் ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தன்னைப்பெற்றவர்கள் பெற்றெடுத்து ஆளாக்கி பெரியவனாக்கி அவனுக்கு ஒரு சிறியவனோ அல்லது சிறியவளோ ஆகும் வரை படும் அல்லல்களை அவர்கள் உணர்ந்து வற்றாத பரிவுடன் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பணிவிடை செய்து மேன்மை பெற வேண்டும் அதற்கெல்லாம் மேலாக இறைப்பொருத்தம் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் என் கருத்தை இங்கு பதிகின்றேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்: பாசத்தைப் பயிற்றுவிக்கமுடியாது அனால் பழகலாம் பழகிப் பார்த்து பழக்கவழக்கமாக்கிகொள்ளலாம். நான் தந்தைப் பக்கமிருந்து இழுத்தேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் தனையன் தரப்பிலிருந்து தள்ளுகிறீர்கள். எப்படியோ, சுமை போய் சேர்ந்தால் சரி.

தம்பி crown: உணர்வுபூர்வமான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனினும், நீங்கள் சொன்னதுபோல் வந்து விமரிசிக்காதது ஒரு குறைதான்.

தம்பி Harmys: அழகான பின்னூட்டம், நன்றி.

தம்பி yasir: வலைப்பூக்களில் வர நேரமில்லாத என் நண்பர்கள் சிலரும் கண் கலங்கியதாகவே சொன்னார்கள். பின்னூட்டத்திலும் தொலைபேசியிலும் உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. 

zakir: நம் ஊரைப் பொருத்தவரை பிழைப்புதேடி பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுவதால் பிள்ளை தகப்பனுக்கிடையேயான பிரத்யேக இழை விடுபட்டுப்போவதால் பிற்காலத்தில் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.

ஷாகுல்: அந்த அவசரகதியில் நமக்கு உலக தேவைக்கான ஓட்டமே பிரதானமாக போயிற்று. அ.நி.என்கிற அற்புத மரநிழலில்தான் சற்று ஆசுவாசப்படுத்தி உள்மன இச்சைகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்!?

sabeer.abushahruk said...

அலாவுதீன், தாஜுதீன்: மார்க்க ஆதாரங்களோடு என் கருத்துக்கு வலு சேர்த்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

தம்பி எம் எஸ் எம்: மிகச்சரியாக என் எண்ணங்களைப் புறிந்துகொண்டமைக்கும் உணர்வுபூர்வமான கருத்துக்கும் நன்றி.
 
அ.நி.: என் இரண்டு கவிதைகளையும் ஒரே நேரத்தில் பதிந்தமைக்கு ரெட்டை நன்றி (ஃபோட்டோவில் சிரிப்பவனும் நான் எழுதிய கவிதைதான்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: தங்களின் இரண்டாம் கவிதைக்கு வரைகலை தொட்டு கை வைக்கப் பார்த்தேன் அப்புறம் அட ! வாப்பாவின் மீசை குத்துவதைக் கூட புன்னகையால் வென்றெடுத்த உங்கள் (மூன்றாம்) கவிதையின் அசத்தல் !இதைவிடவா வரைகலையில் மெருகேற்றிட முடியுமென்றும் அமைதியாகிவிட்டேன்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சபீர் காக்கா. எதை எழுத எதைவிட.இந்த பக்கத்தில் சொல்லிவிடக்கூடியதா தந்தையின் மகிமை?. முடிந்தவரை எழுதிவிட்டீர்கள் அதைப்பற்றி எழுத எத்தனிக்கும்போதே கண்ணீர் முந்திகொண்டுவருகிறது.எந்தையே! என் தந்தையே! நீ உன் வாழ்வையே எனக்கு தந்தியே!(இன்னும்தான்)உன் கைபிடித்து நடந்ததும்,இன்று என் கைபிடித்து நடக்கும் சூழலில் இளமை உன்னை விட்டு ஓடிப்போய்விட்டது. என் தலையை வருடிவிட்ட அந்த விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சூம்பிவருகிறது.தீர்கமான பார்வையில் திரை போல் ஒரு மரப்பு.இத்தனைக்கும் இடையில் எனக்காக(எங்களுக்காக) இரவு வெகு நேரம் நின்று அல்லாஹ்விடம் இறைஞ்சும் உங்கள் கருனைக்கு முன் இந்த பாலய் போன வாழ்கையில் என்ன கைமாறு செய்ய முடியும்? என் முதல் கதானாயன, நிசத்திலுன் நாயகந்தான்.என் குருவே! என்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவனே. எப்படி வார்தையில் அடக்க முடியும் உன் தியாகத்தை? ஊர் பார்க எழுதி கிழித்து என்ன பயன். இத்துடன் முடிக்கிறேன் என்னால் இதற்குமேல் எழுத முடியாமல் என் விரலும் வேர்துவிட்டது அது விரல் மூலமும் என் ஆனந்த கண்ணீர்,ஆதாங்க கண்ணீர்.

crown said...

நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,
மொத்த கனவுகளின்
ஒற்றைப் பலன்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.முதிர் கன்னியின் முற்றுபெற்ற காத்திருப்பும்,கல்யாண சந்தோசமும் இந்த குழந்தைக்கான காத்திருப்பு.அப்பாடா என்னே ஒரு அட்டகாசமான ஆரம்பம்.
------------------------------------------------------
யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.
---------------------------------------------------------------------
மூன்றாம் உயிர்கவிதையின் பிறப்பில் நடந்தது,அதிலும் நான் அதிஸ்டம் உள்ளவன் முதலில் என்னைத்தான் பார்த்தாள்.அருவை சிகிச்சையில் என் கண் முண்னே தோன்றிய , நிஜ குளோனிங்.அஹா! அது அந்த கணம் வாழ்வில் மறக்கவியலா கணம்.
---------------------------------------------------------------------பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!
-------------------------------------------------------------
இதைப்படிக்கும் போதே காதுகளில் சிவ்வென்று ஒரு சூடு பரவுது.எப்படி இப்படியெல்லாம் எழுத தோனுது? இந்த செப்படி வித்தையை எப்படி கற்றீர்கள்? காக்கா அருமை. நினைத்துப்பார்த்தால் செல்லமாக உங்களின் கண்ணத்தை கிள்ளனும்.
------------------------------------------------------------------
ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!
------------------------------------------------------------------
ஓவியத்தின் கீழே ஓவியன் கையெழுத்துபோல்,
ஓவியமாய் நான் ,கையெழுத்தாய் நீ (குழந்தை).
இந்த ஓவியமான நானே குட்டிகையேழுத்தான உன்னால் உவகைபெருகிறேன். அற்புதம்.கண் முன்னே காட்சியை ஓடவிட்டு எழுதுவீர்களா?

crown said...

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடது கை விரல் பிடித்து
நீயும்
வலது கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற தினம்
நினைவிருக்கா உனக்கு...?
------------------------------------------------------------------
ம்பரையா வந்த பழக்கம் கேள்விபட்டிருக்கிறோம்.இங்கே சந்ததியே நேர்கோட்டில் கைகோர்த காட்சியை வார்தையில் வடித்த விதம் முக்காலம்மும் நீர் முத்த கவியாய்,இளைய கவியாய்,வளரும் கவியாய் எப்படி அல்ஹம்துலில்லாஹ்,மிகுத்துச்சொல்லவதற்கு இதைவிட வேறு இல்லை. நான் சொன்னதும் மிகையில்லை.
-------------------------------------------------------------------
நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!
----------------------------------------------------------------
ஒரு கவிஞன் எழுதினான் ஒரு பொம்மை வாங்கித்தந்தேன் .அதை உடைத்து பல பொம்மை செய்தாய்.புத்திசாலித்தனமா தொழிலையும் சேர்த்தே எழுதிட்டியலோ?
-----------------------------------------------------------
நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!
---------------------------------------------
சீனி இனிக்கும் என்பதைச்சொல்லமுடியும் அந்த சுவையை
இப்படித்தான் என்று எழுத்தில் உணர்தமுடியுமா? செய்துவிட்டீர்களே!!!!!!!

crown said...
This comment has been removed by the author.
crown said...

நீ உண்டமிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!
--------------------------------------------------------------------
எல்லாம் அவனே அவனுக்கு முதல் தோழன் நானே!
இப்படி எல்லாவிதத்திலும் தோள் கொடுக்கும் தோழனாய் ஒவ்வொரு தகப்பனும் இருப்பதை இயல் பாய் நடப்பதை கொண்டு எளிமையாய் விளக்கிவிட்டிருக்கிறீர்கள்.
--------------------------------------------------------------------
இப்படி அன்பா வளர்க்கப்படும் மகன் நிச்சயமாய் , நல்ல நல குணாதிசியம் உள்ளவனாத்தான் வருவான் என்கிற நம்பிக்கை நல்ல தகப்பனுக்கு ஏற்படுவது இயல்பே!.அருமையான், ஆரோக்கியமான எதிர்பார்ப்பு.
இன்சாஅல்லாஹ் தொடரும்....

sabeer.abushahruk said...

தம்பி crown, அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்பதான் எனக்கு அப்பாடான்னு இருக்கு. நீங்கள் விமரிசிக்காத ஆக்கம் "பைன்டிங் செய்யப்படாத புத்தகம்போல், மடித்து வைக்கப்படாத உடைகளைப்போல், தூசு தட்டப்படாத கீபோர்ட்போல், இன்னும் திறுத்தப்படாத பரீட்ச்சைப் பேப்பர்போல்" ஒரு தேக்கத்தை ஏற்படுத்துவதால், ரிசல்ட் முதல்லேயே வந்துட்டாலும் இப்பத்தான் மார்க் ஷீட்டை தந்திருக்கிறீர்கள். ஷுக்ரன் ஜசீரன்.

தம்பி Thajudeen: //வெளிநாடுகளில் வாங்கியனுப்பும் கார் பொம்மைகளை பிள்ளைகள் உடைத்துவிடுவான் என்று சொல்லியே சில வீடுகளில் "கார் பொம்மை "showroom" இருக்கு காக்கா.//
இதுக்கு பதிலா  வாங்கிக்கொடுக்காமலே இருந்திடலாம். 

நாமெல்லாம் காரை ஓட்டியும் உருட்டியும் விளையாடுவோம். இவன் ரெண்டு கைகளிலும் ரெண்டு கார்கள் எடுத்து வேகமா வந்து முட்டுறான். அப்ப்டி முட்டி ஒரு காரை பறக்கவிட்றான். பறக்காத கார் ட்ர்ட்ர்னு உறுமிக்கிட்டு கீழே நிற்குது. 

யாசிர் மகன் கார் வாங்கிய கொஞ்ச நேரத்திலேலே ஒரு வீலை மட்டும் கெழட்டி எடுத்துட்ரானாம்.

crown said...

முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ
முடங்கிப்போகையில்...

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழு பசிக்குமாக
முக்காலத்திற்குமாய்
மூன்று கவலம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தருவாயா மகனே?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் காக்கா. ஒவ்வொரு தடவையும் அன்பை புதிபித்துகொள்கிறீகள்.ஆதலால் நான் அன்பில் பித்து கொள்கிறேன்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே எப்படியெல்லமோ கஸ்டப்பட்டு,இஸ்டப்பட்டு,கடன் பட்டு,துன்பபட்டு,துயர்பட்டு,மேனியெல்லாம் புண்பட்டு,வேகுதூரம் உழைப்புக்காய் புறப்பட்டு போற்றி வளர்த்த மகனிடம் முழு உரிமையாய் கேட்பது தவறல்ல. தந்தை மனம் அறிந்து கடமைஆற்றுபவனே நல்ல மகனாவான்.
( என்னாப்பா கிரவுன் கஸ்டம்,துன்பம் ,துயர் எல்லாமே ஒன்னுதானேன்னெ அபுஇபுறாகிம் காக்கா கேட்பது தெரிகிறது).இது சபிர் காக்காவின் மற்றுமொரு மணி மகுடம்.

Unknown said...

தஸ்தகீர் பிரித்து மேயாவிட்டால் அது பின்னூட்டமே இல்லை .......

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு